Saturday, September 20, 2014

Alumni Meet

Dear friends,
if you are one of those members who always wanted to meet your friends (school / college) and waiting for your educational institute to initiate/conduct "Alumni Association", please read on this.

As you all know, i am one of those members who are blessed to be citizens of Patti Veeran Patti (PVP).
In PVP, we do have very good schools. 
ALL the members of "1966-67 batch of SSLC" from "N.S.V.V. Boys Higher Secondary School", PVP have been meeting on last Sunday of every year.

I am sure all of us used to immediately start thinking any one of the below
1) it may be an initiative from the school
2) all / most of them are using smart phone with whatsapp
3) all / most of them have internet at home and using Facebook
4) all of them had always been in the same village since their schooling
5) they might have been in contact with each other since 1966-67

If you have thought so, sorry! they are not meeting your expectation!!!

Just 2 members of that group have started trying for a get together since early 2008 (after 41 years from completion of their SSLC !!!) and made it happen on 28/Dec/2008 as a first time.
They were able to reach out to 45 members of their batch (out of 70, 14 were not alive at that time and remaining 11 could not be contacted). Obviously, all those 45 have ensured to be present for the meet.
The meet happened in the SAME CLASS ROOM, where they have studied their SSLC. The headmaster and all staff members have extended their support. Got informed that headmaster Mr.Rajaguru have given a nice nice speech. Staff members of 1966-67 were present too! Mr.Vijaya Rajan who was the headmaster of 1966-67 also have participated the event and have remembered all the students!

Don't we all - people who are connected through facebook / whatsapp - think we can do such meet very easily? Let us try to get connected with our friends of earlier days. All the best!!!

Friday, March 7, 2014

காதல்

அனைவருக்கும் வணக்கம்!

"காதல்" - ஒரே வார்த்தை உலகிலுள்ள அனைவரையும் ஏதோ வகையில் பாதிக்க முடியும் என்றால், அது இதுவாகத்தான் இருக்கும்! 
அதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்குள்ளும் வேறு வேறு மாதிரி உணர்ச்சிகளை உண்டாக்குகிறது என்பது இன்னுமொரு ஆச்சர்யம்!!

தன் பிள்ளை இதில் மாட்டிக் கொள்ளக் கூடாது எனப் பெற்றோரும், தன் பரம்பரையில் யாரேனும் இதைச் செய்தால் அன்றோடு தங்கள் பாரம்பரியமே அழிந்து விடுமென தாத்தா-பாட்டியரும்,  "நம்மாளுக வேறவைங்க  வீட்டுக்குப் போனா நம்ம சாதிக்கு பெரிய அவமானம்டா" என தலைவர்களும் ஒரு புறம் இருக்க ....

தமது வேலையை மாய்ஞ்சு மாய்ஞ்சு உலகத்தின்  இன்னோரு பக்கத்தில் இந்தியர்கள் பார்த்துக் கொண்டிருக்க, நிம்மதியாக நேரம் செலவழிக்கும் அமெரிக்கர்கள் போல; எந்த பாதிப்பும் இல்லாமல்; 
"உலகத்தைவிட உன்னையும் - உன்னை விட நம் காதலையும் நேசிக்கிறேனென்" என காதல் வயப்பட்டோரும்;
என் மேல் மட்டும் எனது வாழ்க்கைத் துணை கொள்ளை கொள்ளையாய் காதல் கொள்ள வேண்டுமென திருமணமானொரும்; இன்னோரு புறத்தில் இயங்கிக் கொண்டிருக்க ...


சமுதாயத்தில் இருப்பதைத்தான் நாங்கள் எதிரொலிக்கிறோம் என்று சொல்லி, முடிந்த அளவு வேறு எதையும் பற்றி யோசிக்காமல் / யோசிக்க விடாமல், வெண் திரையும் சின்னத்திரையும் அதே காதலை வைத்து பணம் கொழித்துக் கொண்டிருக்க ... 

இந்த மாதிரி, அங்கெங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கும் காதல் பற்றி என் பார்வை - இதோ உங்கள் பார்வைக்கு:

இந்த விசயத்தைப் பற்றி எழுத வேண்டுமென முடிவெடுத்தவுடன்  "என்"னுள் "தோன்றிய" சில கேள்வி-பதில்கள் இவை.
ஏன் ஒரு இளைஞன் / இளைஞி காதல் கொள்கின்றார்?
ஒரு ஈர்ப்பு! 
தான் விரும்பிய மாதிரி உருவம், குணம், நடத்தை, திறமை, வாழ்க்கை-முறை-தரவல்ல-வசதி == இவற்றுள் குறைந்த பட்சம் ஏதேனும் ஒன்றை, எதிர் பாலினத்தைச் சேர்ந்த சக வயதுள்ள ஒருவரிடம் பார்க்கும் பொழுது ஏற்படும் ஒரு இனம் புரியாத ஒரு ஈர்ப்புதான் காரணம். அதே ஒரு ஈர்ப்பு இருவரிடமும் ஏற்படும் பொழுது அது காதல்.
"நாங்கலாம் இதே உலகத்துல தானடா இருக்கோம் .. அதே மூஞ்சியப் பாத்தோம், எங்களுக்கு ஒண்ணும் தோனலையே? உங்களுக்கு மட்டும் எப்புடிறா வருது" என்று ஓலை நீட்டுவோருக்கு - 
நீங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் - உங்கள் சகோதரி/மகள் முதன் முதலில் சேலை கட்டிய பொழுது உங்கள் மனோநிலை என்ன? உங்கள் நினைவுகளைக் கொஞ்சம் பின்னோக்கி ஒட்டுங்கள். - 
நீங்கள் தினம்தோறும் சுடிதாரில் பார்த்த உங்கள் தோழியை முதன் முதலில் சேலை கட்டிய பொழுது உங்கள் மனோநிலை என்ன? ஒரே மாதிரியாகவா இருந்தது? அதுதான் விடை.
நீங்கள் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் - உங்கள் கணவர் உங்களுக்கே தெரியாமல் ஒரு ஆச்சர்யப்பட வைக்கிற பரிசை வாங்கி வந்து தரும் பொழுது உங்களையும் அறியாமல், உங்கள் உதட்டில் ஒரு புன்னகை "i love you"-வோடு  பூக்கும். அந்த மாதிரி ஒரு விஷயம் திருமணத்திற்கு முன்பே யாரோ ஒரு இளைஞன் மூலம் நடப்பதாக யோசித்துப் பாருங்கள். அதுதான் விடை.
தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். "நீங்கள் காதலிக்கவில்லை" என்றால், அதற்கு "நீங்கள் காதல் வயப்படவில்லை" என்பதுதான் காரணம். வித்தியாசமா? நீங்கள் இது வரை ஒரு முறை கூட உங்கள் money purse-ஐ தவற விட்டதில்லை என்றால், அதற்கு நீங்கள் முன் ஜாக்கிரதையான ஆள் என்பது பொருள் அல்ல. எந்த பிக் பாக்கெட் ஆசாமியும் உங்களிடத்தில் கை வைக்கவில்லை என்பதுதான் பொருள். வைத்தால் நீங்கள் நிச்சயம் இழப்பீர்கள் - காதலிடம் உங்களையும், பிக் பாக்கெட் ஆசாமியிடம் பொருளையும்.
இன்றைக்கு, இங்கு இருக்கும் காதலர்களுக்கு முக்கியமான பலம் - பொருளாதார சுதந்திரம். அதனால், தங்கள் வாழ்க்கையை தானாகவே அமைத்துக் கொள்வதில் இருக்கும் பொருளாதராத் தடை இல்லை. மேலும், எளிய தொலைத் தொடர்பு என்கிற மிக முக்கியமான காரணம். அதனால், பார்க்காத காதலை அடிக்கடி பார்க்க முடிகிறது!

ஏன் பெற்றோருக்கு காதல் என்றால் ஏன் இப்படி ஒரு பயம்?
உங்கள் வாழ்க்கை மீது ஒரு முன்னெச்சரிக்கை! 
நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் மிதிவண்டி பழகிய பிறகும் கூட, உங்கள் பின்னாடியே ஓடி வந்த தகப்பனுக்கு, உங்கள் மிதிவண்டி மீது பயம் அல்ல. நீங்கள் சாலையில் நல்லபடியாகவும் பாதுகாப்பாகவும் ஓட்டி விடுவீர்களா என்கிற எண்ணத்தால், நீங்கள் நல்ல படியாக வர என்ன செய்ய வேண்டும் என்கிற முன்னெச்சரிக்கை. 
நீங்கள் காதலிக்கும் பொழுது, நீங்கள் காதலிக்கிற நபரின் மதம் / சாதி / நிதி நிலை / சமூக அந்தஸ்து / படிப்பு / குடும்ப சூழல் ... இப்படி பல விசயங்களைக் காரணமாகச் சொல்லி உங்கள் காதலை எதிர்த்திருப்பார்கள். ஆனால், நன்கு உற்று நோக்கினால், அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தால், உன் வாழ்க்கை நிலையற்றுப் போய் விடுமோ என்கிற எண்ணம்தான் முக்கிய+மூல காரணமாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். 
"அது மட்டுமல்ல. அவர்கள் எங்கள் உறவினர்க்கும், சமுதாயத்திற்கும் போய் பயப்படுகிறார்கள். வாழ்ந்து முடிக்கப் போகிற அவர்களுக்காக, வாழப் போகிற நாங்கள் எதற்காக கஷ்டப் பட வேண்டும்?" என்கிறீர்களா? மிகச் சரியான கேள்வி. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் - எந்த நல்ல விசயத்துக்கும் உங்கள் உடனிருக்கும் "நண்பர்களுக்கு" ஹோட்டலில் treat வைக்கும் வகையறா நீங்கள். ஆனால், எந்த விசேசத்துக்கும் தன்  வீட்டில் "உறவுகளுக்கு" மணக்க மணக்க சாப்பாடு போட்டு மகிழ்ந்தவர்கள் அவர்கள். 
உங்களுக்கு, மறு சந்திப்பு என்பது facebook post-ல் போடப்படும் message. அவர்களுக்கு நேரடியாக சந்தித்து அடிக்கும் அரட்டை.
மேலும் ஒரு முக்கியமான வியூகம். நீங்கள் IT - ல வேலை செய்ற, ஏதோ ஒரு சாதி/மதம் சேர்ந்த, பையன்/பெண் தேடும் சந்ததி. அவர்கள் தன் சாதியைச் சேர்ந்த தன் தொழில்ல இருக்கிற வரன் தேடுகிற சந்ததி.அப்படிப் பட்டவர்கள் தங்கள் உறவுகளையும் சமூகத்தையும் எப்படி நிராகரிக்க முடியும்?!

ஏன் பல பேருக்கு காதல் மேல் ஒரு வெறுப்பு?
உங்கள் மீது ஒரு அக்கறை! 
உங்கள் நலம் விரும்பி, எடுத்த எடுப்பில் உங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட வாய்ப்பே இல்லை. காரணம் - உங்கள் மீது ஒரு அன்பு  + உங்கள் வாழ்க்கை மீது ஒரு அக்கறை.
அதையும் தாண்டி இன்னுமொன்று இருக்கிறதென்றால் அது அந்த நபருக்கு ஏற்பட்ட / தெரிந்த வேறு ஏதோ ஒரு காதலின் தவறான விளைவு.

காதல் என்பது என்ன?
இந்த கேள்விக்கான விடை, இதற்கு முன்பு யோசித்த அனைத்து கேள்விகளுக்கும் விடையையும் தரவல்லது!
"காதலுக்கு மரியாதை" படத்தில் கடைசி ரீலில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து "எங்கம்மா ஏன் இந்த மாதிரி இல்ல?" என்று பொங்கும் இளைஞனில் எத்தனை பேர் அதே படத்தின் அஞ்சாவது ரீலில் வருகிற  நாயகன் மாதிரி நாயகியின் மீது விரல் கூட படாமல் இருக்கிறான்?!
பெற்றோர் காதலைக் கண்டு பயப்படக் காரணம், காதல் எனும் பெயரில் அவர்கள் கடற்கரையில் ஆரம்பித்து, வள்ளுவர் கோட்டம் வழியாக, வண்டலூர் வன விலங்கியல் பூங்கா வரை காண்கின்ற கொடுமைகள்தான்.
"நாங்கள் எங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம். உங்களுக்கென்ன?" எனக் குரல் உயர்த்துவோற்கு - "இருக்கலாம், ஆனால், அதற்காக அறையில் செய்ய வேண்டியதை அரங்கேற்றம் செய்யக் கூடாது. 

என்னென்ன பிரச்சனை வருகிறது & இதற்கு என்னதான் முடிவு??
பிள்ளைகள் - பெற்றோரிடம்: "எம் புள்ள போய்ட்டா என்ன செய்றது?", "வேற வழி இல்ல", "ஒத்தப் புள்ள வச்சுருக்கோம்", "அவ(ன்) சந்தோசம்தான் எங்க சந்தாசம்" என்று ஏதோ ஒரு வார்த்தை சொல்லி, தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொண்டு, பெற்றோர் காதல் திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் தங்களது பெற்றோர் முழு மனதுடன் சம்மதித்து விட்டதாக தவறாக நினைத்து விடுகின்றனர். இது பெற்றோர் மீது தேவைப் படுகிற கவனத்தின் அளவை சரியாக எடுத்தக் காட்டுவதில்லை.

காதலர்கள் - அவர்களுக்குள்: மனதினை நேசிப்பதையும், காதலுடன் பார்ப்பதையும், பாராட்டுவதையும், மிக முக்கியமாக மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தால் கூசாமல் கேட்பதையும் திருமணம் எனும் சடங்கு நிப்பாட்டக் கூடாது.

பெற்றோர் - பிள்ளைகளிடம்: பெரும்பாலும், அதிக அளவிலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் காதலை நம்பத் தகுந்த ஒன்றாக நினைக்கவே முடிவதில்லை. காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த விசயத்திலும்  (சின்ன விஷயத்தயும் கூட) முடிவுகளை தன்னந் தனியாக எடுக்க முடியும் என்றே நம்புவதில்லை. பெற்றோர் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்  - அவர்களுக்குள்: "நாங்களே பாத்திருந்தாலும் இப்பிடி ஒரு பொண்ணு/பையன் பாத்திருக்க மாட்டோம்" என்கிற எண்ணம் வந்தவுடன் சொல்லத் தயங்கக் கூடாது - ஈகோவை வீட்டுக்குள் வர விடக் கூடாது.
திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் எந்த சின்ன விசயத்தையும் - காதல் திருமணத்தில் மிகவும் குறிப்பாக - இரு தலைமுறையிலும், இரு வீட்டார் பக்கத்திலும் - சின்னதாகவே பார்ப்பதில்லை என்பதுதான் கொடுமையின் உச்சம். மனம் விட்டு இரு வீட்டாரும் பேச வேண்டும்.

எவரையும் காயப் படுத்தாமல், காதலைக் காதலாகவே மட்டும் அணுகுவோருக்கு வாழ்த்துக்கள்!

தங்கள் நேரத்திற்கு நன்றி. தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். 

Saturday, February 8, 2014

நமக்கு மேல இருக்கிற ஒருத்தன்...

அனைவருக்கும் வணக்கம்!

"'உன் வாழ்க்கை உன் கையில்' என்கிற தலைப்பில் போன முறை வலைப்பூ பதிவு செய்து விட்டு, இம்முறை அதற்குத் தலைகீழாக இப்படி ஒரு தலைப்பா" என எனது ஆஸ்திக & நாத்திக நண்பர்கள் கை கோர்த்தபடி புருவம் உயர்த்துவது புரிகிறது. தயவு செய்து தொடர்ந்து வாசிக்கவும்.

நான் வாழ்க்கையில் பார்த்து மட்டுமல்ல, அனுபவித்தும் தெரிந்து கொண்ட மிகச் சிலவற்றுள் ஒன்று - 
நமக்கு எந்த கஷ்டமும் வராமல்  பார்த்துக் கொள்ள, நமது வேலையையும் முடித்து விட வேறு ஒருவர் இருக்கிறார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிற எவரும் கவலைப் படுவதில்லை என்பதுதான்.

எடுத்துக்காட்டாய், நம் அனைவரும் நாள் தோறும் சந்திக்கும் ஒரு சில விசயங்கள்:
1) வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் (குழந்தைகளையும் சேர்த்து) பார்த்துக் கொள்ளும் மனைவி பெற்ற கணவர்கள் 
2) ஆரோக்கியமான அப்பா அம்மா உடனிருந்து தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள, வேலைக்குப் போகும் பிள்ளைகள் (ஆண் & பெண், இரு பாலரும்)
3) "நீ எதுக்குமா வீணா அலையுற" என்று சொல்லி, வேலை முடிந்து வரும்போதே வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கி வந்துவிடுகிற கணவனைப் பெற்ற மனைவியர் 
- இவர்கள் எல்லோருமே மிக மிக ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். இது அவர்களை விட அந்த வரங்கள் கிடைக்கப் பெறாதவர்களுக்குப் புரியும். 

அப்படிப்பட்ட வரம் வாங்கி வந்தவர்களிடம் பழகிப்பார்த்தால்; அவர்களது சொந்த ஊர், படிப்பு, வேலை, பொருளாதார நிலை, வயது ... இப்படி எல்லா விசயமும் வெவ்வேறாக இருந்தாலும்,  அத்தனையையும் தாண்டி ஒரு மிகப் பெரிய ஒற்றுமையை பார்க்க முடியும். அது - நிம்மதி. 
அவர்களின் பேச்சு, சிரிப்பு, சிந்தனை, வேலைத்திறன், சுறுசுறுப்பு, நடை - இப்படி பல வகைகளில் அந்த நிம்மதி வெளிப்படுவதை பார்க்க முடியும்.

என்னுடைய நண்பர் வாழ்வில் நடந்த ஒன்று - 
அவருக்கு திடீரென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. நாங்கள் நண்பர்கள் சிலர் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். மருத்துவமனை நுழைவாசலில் நண்பரின் தந்தையார் நின்று கொண்டிருந்தார். எங்களது கல்லூரிக் காலம் தொட்டே, அவருடைய தந்தையாரையும் எங்களுக்கு  நன்றாகத் தெரியும். அடுத்தவர்களுக்கு தைரியமூட்டக் கூடிய ஒரு நபர். அவரே உடைந்து போயிருந்தார். எங்களைப் பார்த்ததனாலோ என்னவோ, முகத்தை எப்போதும் போல வைத்துக் கொண்டார்! அவர் சொல்லிய விசயங்களை வைத்துப் பார்த்தால், மிகப் பெரிய சிகிச்சை என்பது கண்கூடாகத் தெரிந்தது.  பேசிக் கொண்டே நண்பரை அனுமதித்திருந்த அறைக்கு போனோம். அவர் வீட்டில் எல்லோருமே பயங்கர அதிர்ச்சியில் இருந்தனர், ஆனால் - ஆச்சர்யமாய், நண்பர் மட்டும் எந்த சலனமும் இல்லாமல், அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு மருத்துவர் மூலம் செய்யப் படப்போகும் operation பற்றித் தெரிய, எங்களுக்கெல்லாம் ரத்த அழுத்தம் (BP) எகிறியது. கொஞ்ச நேரத்தில், நாங்கள் இருக்கும் போதே, நண்பருக்கு BP அளந்தார்கள். அந்த செவிலி சின்னதாய் ஒரு புன்னகையுடன் "எப்பவும் போல நார்மல்தான்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
எங்கள் எல்லோருக்குமே ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. அப்போது எதுவும் காட்டிக் கொள்ளாமல் வந்து விட்டோம். அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்து அவர் முற்றிலுமாக குணமான பின், ஒரு நாள் கேட்டே விட்டேன் "டேய், உனக்கு அந்த நேரத்துல பயமாவே இல்லையாடா" என்று. சிரித்துக் கொண்டே சொன்னார் "எனக்கு அந்த ஆபரேசன் ரொம்ப பெருசுனு தெரியும்டா. என்னோட bank details, savings, investment முதற்கொண்டு எல்லாத்தையும் என் வீட்ல குடுத்துட்டு; office விசயத்தக் கூட போயி hand over பண்ணிட்டுத்தான் admit ஆனேன். எனக்கு என்ன வேணும்னாலும் நடக்கும்கிற அளவுக்கு அது பெரிய ஆபரேசன்னும் தெரியும்" எனச் சொல்ல, ஏதோ காரணத்தால் அந்த "எப்பவும் போல நார்மல்தான்" வசனம் நினைவுக்கு வந்தது. அதையும் பற்றிக் கேட்க, நண்பர் சிரித்த படியே சொன்னார் "எனக்கு எதுவும் ஆகாம, எங்க அப்பா பாத்துப்பர்னு நம்பிக்கை இருந்துச்து, இப்பவும் இருக்கு. எப்பவும் இருக்கு. அப்புறம் எப்டிடா BP-ல வித்தியாசம் வரும்" எனச் சொல்ல, அன்றைக்கு அவரது அப்பா முகத்தை எப்போதும் போல வைத்தது எங்களைப் பார்த்ததற்காக இல்லை என்பது நன்றாக உரைத்தது. அவரது  உறவினர்கள் 3 பேர் மருத்துவர்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்த விசயங்களை (அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை, மருத்துவ முறை...) அதற்கு மேலும்  அடுக்க, அப்போது புரிந்தது - "நமக்கு மேல ஒருத்தன்" என்பதன் அர்த்தம்.

இன்னொரு விஷயம் -
மற்றொரு நண்பர். அவரது பெற்றோர், உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய ஜாமீன் கையெழுத்துப்  போட்டு, அந்த உறவினர் பணத்தைக் கட்ட முடியாமல் போக, இவர் சிறுக சிறுக அடைத்துக் கொண்டிருந்த காலம். அந்த சூழலில், மன அமைதிக்காக அவர் ஒரு தியான நிலையத்துக்கு செல்வது வழக்கம். அங்கு ஒருவரை குருவாக மதிக்க ஆரம்பித்தார். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, நானும் அவரும் ஒரு நாள் அந்த குருவைப் பற்றி பேச நேர்ந்தது. எனது நண்பர் எந்த முடிவையும் அவரது குருவின் யோசனைப் படியே செய்து வருகிறார் என்பது நன்கு புரிந்தது. படித்துக் கொண்டிருக்கும் சிலரது சிந்தனைக் குதிரையைக் கட்டிப் போட - அந்த குரு பிரபலமானவர்களுள் ஒருவர் அல்ல + என் நண்பர் எந்த காணிக்கை / கட்டணம் அந்த குருவுக்கு கொடுத்தது கிடையாது! (அதனால்தான் பிரபலம் ஆகவில்லை / ஆக முயற்சிக்கவில்லை?!). அந்த குரு சொன்ன ஆலொசனைப் படி செய்த எல்லாமே, நண்பருக்கு 100% நல்ல படியாக நடந்திருந்தது. அப்போதும் புரிந்தது - "நமக்கு மேல ஒருத்தன்" என்பதன் அர்த்தம்.

மற்றுமொரு நிகழ்ச்சி -
எனது தோழி ஒருவர் வேலை செய்யும் நிறுவனத்தில் நடந்தது இது. அவர் மிகவும் திறமைசாலி. ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிட முடிவு எடுத்தார். எங்கள் நண்பர்கள் சிலரிடம் அது குறித்து ஆலோசித்தார். அந்த முடிவைப் பற்றி எனக்கு ஏதும் பெரிய ஆச்சர்யம் இல்லாத போதிலும், அவர் சொன்ன காரணம் என்னை பேச வைத்தது. விஷயம் இதுதான் -- அவரது மேலதிகாரி இவருக்கு கொடுத்த வேலையின் அளவு மிக அதிகம். நாங்கள் முன்பொரு நிறுவனத்தில் வேலை செய்த காரணத்தால், எனக்கு அவரது வேலை செய்யும் திறன் & வேகம் தெரியும்.  எனவே, அது மட்டும் காரணம் இல்லை எனத் தோன்றியது. ஒரு பெண்ணுக்கு வேலை செய்யும் இடத்தில் எப்படிப் பட்ட பிரச்சனையெல்லாம் வரலாம் என கொஞ்சம் தெரிந்த காரணத்தால், அதைத் தாண்டி வேறு எதுவும் கேட்காமல், ஒரு குறிப்பிட்ட நபருக்காக வேலை செய்யும்  அலுவலகத்தில் இருந்து வெளியேறுவது தீர்வல்ல என்றும், புதிதாகப் போய்ச் சேர வேண்டிய நிறுவனத்தில் எப்படிப் பட்ட மனிதர்கள் / பிரச்சனைகள் இருக்கும் என்றே தெரியாது என்றும் சொல்லி அனுப்பி வைத்தோம். அதன் பின், சில மாதங்கள் அவரைத் தொடர்பு  கொள்ளும் சந்தர்ப்பம் அமையவில்லை. மீண்டும் ஒரு நாள், வேறொரு விசேசத்தில் நண்பர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது, அந்த தோழி அதே பழைய நிறுவனத்தில் மிக சந்தோசமாக இருப்பதாகக் கூறினார்! வேறொரு, project-க்கு மாறி; அங்கு சக தொழிலாளிகளை மதித்து, மரியாதையுடன் பழகி, பாராட்டி, செய்யும் வேலைக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிற மேலதிகாரி இருப்பதாக கூறினார். அப்போதும் புரிந்தது - "நமக்கு மேல ஒருத்தன்" என்பதன் அர்த்தம். 

நிஜத்திலிருந்து விலகாத ஒரு நிழல் - "புன்னகை தேசம்" என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு வசனம் உண்டு - "எல்லோரும் நல்லவங்களப் பாக்கனும்னு ஆசைப்படுறாங்க  .. ஆனா, யாருமே  நல்லவங்களா இருக்கணும்னு நெனைக்கிறதில்ல"-னு. 

நிச்சயமாக சொல்கிறேன் - அது மறுக்க முடியாத உண்மை. 

நமக்கு மேல இருக்கிற ஒருத்தன் நம்மள நல்லா பாத்துக்கணும்னு நாம எல்லாருமே எதிர் பார்க்கிறோம் - வீடு, அலுவலகம் இப்படி எதுவாக இருந்தாலும். ஆனா, நாம அந்த மாதிரி இருக்கணும்னு எப்போவாவது நெனச்சுருக்கோமா? 

  • ஏற்கனவே அப்படி நினைக்கிறவங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். 
  • அந்த மாதிரி நினைக்கிறது மட்டுமின்றி, அதன்படி வாழ்வோருக்கு எனது தலையாய வணக்கங்கள். 
  • இது வரைக்கும் அப்படி நினைக்காத சக மனிதர்களே, இன்று முதல் அப்படி நினைத்து அதன் படி வாழ முயற்சி செய்வோம் - 

"வீரம்" படத்துல நாயகன் சொல்றது ஞாபகம் வருது - "நம்ம கூட இருக்கறவங்கள நாம நல்ல பாத்துக்கிட்டா, நமக்கு மேல இருக்கறவவன் நம்மல நல்லாப் பாத்துக்குவான்"! 
நான் நம்புறேன் "நம்ம கூட இருக்கறவங்கள நாம நல்ல பாத்துக்கிட்டா, நமக்கே நம்மல ரொம்பப் பிடிக்கும்" - நம்புவோம்! முயற்சி செய்வோம்!! முடிந்த வரையல்ல, முடிக்கும் வரை!!!

தங்கள் நேரத்திற்கு நன்றி. தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். 


Sunday, January 26, 2014

உன் வாழ்க்கை உன் கையில்!

அனைவருக்கும் வணக்கம்!

எனது வலைப்பூக்களில் முதலாவதாக பதியப் படும் விஷயம் எனது இன்றைய நிலைக்கு காரணமான ஒன்றாக இருக்க வேண்டுமென நம்பினேன். 
நாம் நம்புகிற / செயல்படுத்துகிற சில விசயங்கள் சில நேரங்களில் திரைப்படத்தின் பெயர் / பாடல் / வசனங்களில், மேலும் அழகிய & பொருத்தமான வார்த்தைக் கோர்வையில் வரும் பொழுது நமக்கு மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படுவதுண்டு. அது போன்ற ஒன்றுதான் சூப்பர் ஸ்டார் படத்தில் வந்த இந்தத் தலைப்பு.

எனக்கு கிடைத்தது போன்ற மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன் பிறப்பு, கூட்டுக் குடும்பம், நண்பர்கள், ஆசிரியர்கள், சக தொழிலாளர்கள், அண்டை வீட்டார்,  பள்ளி, கல்லூரி & அலுவலகங்கள் எல்லாம் வேறு எவருக்கேனும் கிடைத்திருந்தால் நிச்சயமாக இன்னும் பல மடங்கு முன்னேற்றம் கண்டிருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இருப்பினும், எனக்குக் கிடைத்த அவ்வளவு நல்ல சூழ்நிலைக்கு மேற்கொண்டு, என்னால் செய்ய முடிந்த ஒரே ஒரு விஷயம் - "உன் வாழ்க்கை உன் கையில்" என்ற நம்பிக்கை மட்டுமே!
இதனை நான் குறிப்பிடக் காரணம் :: எனக்குக் கிடைத்த வரம் போன்ற இந்த வாழ்க்கை கிடைக்கப் பட்ட எவரும் செய்திருக்க வாய்ப்புள்ள ஒன்று - அந்த நல்ல வாழ்க்கையை, வேறெதுவுமே செய்யாமல், சந்தோசமாக வாழ்ந்து அனுபவித்திருப்பது மட்டும்தான். 
நான் அதனைச் செய்யாமல், இப்பொழுது செய்து கொண்டிருக்கும் பல விசயங்களை (அலுவல், வலைப்பூ..) செய்ததால் கிடைத்தவை மிக அதிகம். உதாரணமாக - 
1) பல வித்தியாசமான மனிதர்களை சந்திக்கும் சூழல் 
2) பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு 
3) சவாலான பல சோதனைகள எதிர் கொள்ளும் களம் 
4) (நம்மில் பலர் செய்ய முயலும்) அடுத்த சந்ததியினருக்கு இன்னும் சிறந்த வாழ்க்கை 
5) எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் - "நான்" என்ன செய்தேன் என்று பார்த்து மகிழ ஓரிரு விஷயங்கள் 

ஒவ்வொரு வருடமும், எனது அப்பா ஒரு நாட்குறிப்பு (diary) எனக்கு வாங்கித் தருவது வழக்கம்.
எனது பாட்டையா(அப்பாவின் அப்பா) மண்ணுலகில் இருந்தவரை, அவரிடம் ஆசிர்வாதம் வாங்கும் விதமாக, வருடத் துவக்கத்தில், அந்த நாட்குறிப்பின் முதல் பக்கத்தில் அவர் கையால் வாழ்த்துச் செய்தி ஒன்றை எழுதி வாங்கி வந்தேன். அவர் தவறாமல்  எழுதிய ஒன்று "தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தரும்" என்பதுதான்.

நன்றாக யோசித்துப் பார்த்தால், தன்னம்பிக்கை / விடாமுயற்சி - இவற்றுள் ஏதேனும் ஒன்று இல்லாமல் போயிருந்தாலும் நாட்டில் பல பேர் வெற்றியைச் சுவைத்திருக்க மாட்டார்கள் என்பது நன்கு புலப்படுகிறது.

தன்னம்பிக்கை & விடாமுயற்சியின் காரணமாக விளைந்த நற்பலன்களாக நான் கண்டவற்றுள் சில:
திருச்சி புனித வளனார் (St.Joseph's) கல்லூரியில் 1993-ல் நடந்த சம்பவம். கல்லூரி ஆரம்பித்து சுமார் ஒன்றரை மாத காலகட்டத்திற்குப் பின் வந்து ஒரு மாணவர்  இயற்பியல் இளங்கலை (B.Sc,  Physics) முதலாமாண்டு சேர்ந்தார். நேராக கடைசி பெஞ்ச்சில் சென்று ஐக்கியமானார். அவர் வந்தவுடன் இருந்த முதல் வகுப்பு Mathematical Physics. முதல் கணக்கை விரிவுரையாளர் சொல்லித்  தர ஆரம்பித்தார். ஓரிரு வினாடிகள்  கடந்திருக்கும். வகுப்பறையே திரும்பிப் பார்க்கும் படியாக அவர் முதல் ஆளாக விடையை சொன்னார். விரிவுரையாளர் அப்போதுதான் ஒரு புது மாணவர் அங்கு வந்திருப்பதையே கவனித்தார். ஆங்கிலத்திலேயே அவர் அந்த மாணவரைப்  பற்றி விசாரிக்க, அவர் பதில் சொல்ல முடியாமல்  தள்ளாடியது புரிந்தது. விரிவுரையாளர் அவரை முன் பக்கமாக அழைத்து தமிழிலேயே பேசிவிட்டு, "Tamil medium" ஆ என்றார். ஆம் என்று அவர் ஆமோதிக்க, எங்களுக்கு அவரது அறிவும், ஆங்கில திறன் பிரச்சனையும் புரிந்தது. ஆனால், விரிவுரையாளர் அந்த மாணவரை முன் பெஞ்ச்சில் உட்கார வைத்தபொழுது, எங்கள் எல்லோரையும் விட தனக்கு விஷயம் அதிகம் தெரியும் என்பதை புரிந்து கொண்டார். அந்தத் தன்னம்பிக்கை அவருக்கு செய்து கொடுத்த அபூர்வங்கள் பல. முக்கியமாக அவர் அந்த நிமிடம் முதலாக எங்குமே "யார் Tamil medium" என்று கேட்டால் கையைத் தூக்கியதே கிடையாது. நான் அது பற்றி ஒரு முறை கேட்ட போது சொன்னார் "நான் Tamil medium-னு சொல்ற அந்த ஒரு வினாடி கூட ஆங்கிலத்துல சரளமா பேச முடியும்னு நம்புற என்னோட தன்னம்பிக்கை கொரஞ்சுரக் கூடாதுன்னு!".
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இப்போ வரைக்கும் அவர் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்னு நெறையப் பேருக்குத் தெரியாது!
என்னோட நண்பர் ஆதி ஒரு முறை சொன்னார் "நான் திருமங்கலம் school english medium da. எனக்குத் தெரிஞ்சு தமிழ் நாட்ல சென்னைல இங்கிலீஷ் medium படிக்கிறதுதான் வேற. மத்த எல்லா ஊர்லயும் எந்த medium படிச்சாலும் ஒண்ணுதான்னு!". நல்லா யோசிச்சுப் பாத்திங்கன்னா, நகரத்துல படிக்கிற மாணவர்களுக்கு ஒரு தனித் தைரியம் இருக்கும். அந்த சூழல் தர்ற வரம் அது". அது எல்லோருக்கும் கெடைக்கனும்னா, அது அவங்களோட தன்னம்பிக்கையால மட்டும் தான் முடியும்கிறது என்னோட நம்பிக்கை.

அரசூர்  V.R.S. பொறியியல் கல்லூரியில் படிக்கும் பொழுது பார்த்த ஒரு விஷயம் -
என்னோட நண்பர் ஒருத்தர். நல்ல அறிவாளி. எப்பவாவதுதான் படிப்பார். ஆனா, semester கால அட்டவணை (time table) வந்த ஒடனே, அவருக்கும் மட்டும் புரியிற மாதிரி ஒரு ப்ளான் போடுவார். அந்த நாள்ல இருந்து அவரப் பாக்கவே ஆச்சர்யமா இருக்கும். ஒவ்வொரு பரீட்சை முடிஞ்சு வரும்போதும் எவ்ளோ மதிப்பெண் வரும்னு சொல்லுவார். அதிகபட்சம் 5 மதிப்பெண் வித்தியாசம்தான் இருக்கும்! 

Pinnacle Info Solutions-னு ஒரு அலுவலகத்துல வேலை பார்த்தப்போ நடந்தது. நாங்க 7 பேர் ஒரே project-ல வேலை பார்த்தோம். எல்லாரும் 2 - 3 வருஷம் அனுபவம் உள்ள ஆட்கள். ஒரு நாள் Client escalation-னால பெரிய பிரச்சனை. Senior Project Manager (மொத்தக் கம்பெனிக்கும் ஒரே ஒருத்தர்தான்) வந்து பேசுனார். எங்க 7 பேர்ல யாராவது அந்த project-க்கு தலைமை தாங்கணும்னு முடிவு பண்ணுனார். அந்த நபர்தான் பொறுப்புன்னு ஒரு குண்டு வேற. எங்கள்ள ஒரு நண்பர் மட்டும் ஒடனே ஒத்துக்கிட்டார்! எங்க எல்லோருக்கும் திறமைல ஒண்ணும் பெரிய வித்யாசம்லாம் இல்ல. எங்க எல்லாரையும் விட அவர் அந்த கம்பெனிக்குப் புதுசு வேற! 
நம்புறீங்களோ இல்லையோ - அவர் எப்போ வீட்டுக்குப் போறார் / வர்றார் அப்டிங்கறது சத்தியமா எங்க யாருக்குமே தெரியல. ஆனா, அங்க ஆரம்பிச்சது அவரோட graph-ல ஏறுமுகம். இப்போ வரைக்கும் அவர நான் தொடர்ந்து    கவனிச்சுக் கிட்டே வர்றேன். அந்த தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் அவர்கிட்ட மட்டும் இல்ல - dracula கடிச்ச மாதிரி அவரைச் சுத்தி இருக்கிற எல்லாருக்கும் பரவிக்கிட்டே  இருக்கு!

சுருக்கமா சொன்னா - தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தா திறமையும் வெற்றியும் தானா வரும் - ஆனா தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் சேர்ந்து இல்லாத திறமைக்கு வெற்றி கிடைக்காதுன்னு நம்புறேன் - நீங்க?

தங்கள் நேரத்திற்கு நன்றி. தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். 


நன்றி, வணக்கம்!

Sunday, January 19, 2014

அகரம்

அனைவருக்கும் எனது அன்பு கலந்த பணிவான வணக்கங்கள்.

இது - வலைப் பூக்கள் உலகிற்குள் என்னுடைய முதல் அடி.

நான் - 
திண்டுக்கல் அருகில் உள்ள "பட்டி வீரன் பட்டி" எனும் குக்கிராமத்திலிருந்து வந்து, பணியின் காரணமாக சென்னையில் வாழும் சிலருள் ஒருவன்.
பலவேறு காரணங்களால்; பாடப் பத்தகம் & அலுவல் காரணமான தேவை தவிர வேறு எந்த படிப்பறிவையும் வளர்த்துக் கொள்ளாத பலருள் ஒருவன்,

வாழ்வை இரசிக்கிற, 
மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிற, 
குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்களோடு இருப்பதை அதிகமாய் விரும்புகிற, 
சுற்றியிருப்போரை மகிழ்விப்பதை இன்னும் அதிகமாய் விரும்புகிற, 
பிடித்த மற்றும்/அல்லது பழக்கமில்லாத விசயங்களை மட்டும் ஒத்துக் கொண்டு; அவற்றை முழுமையாய்ச் செய்கிற, 
மேலும் சில ரசிக்கத்தக்க விசயங்களைத் தேடியபடியே பயணிக்கும் (இன்னும்) ஒரு பயணி.

முக நூலில் எனது சில பதிவுகளைப் பார்த்து நண்பர்கள் கொடுத்த பெரும் ஊக்கத்தினாலும், 
எனது நண்பர்கள் சிலர் தொடர்ந்து எழுதி வரும் வலைப் பூக்களைப் பார்த்து ஏற்பட்ட சிறு ஆர்வத்தினாலும்,
இந்த உலகினுள், கீழ்க்கண்ட எண்ணங்களோடு, அடியெடுத்து வைக்கிறேன்.

1) "யாரேனும் ஒரே ஒருவருக்காவது பயன்படும்" என்று நான் உணர்கிற எனது அனுபவங்களையும், அறிகின்ற விசயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் 
2) நான் ஆர்வமாயிருக்கிற அல்லது/மேலும் எனக்குதேவைப்படுகிற விசயங்களில், மற்றவர்களின் கண்ணோட்டத்தை கேட்டுப் பெற வேண்டும் 
3) எனது கவிதை எழுதும் ஆர்வத்தினால் விளைகின்ற எழுத்துக்களை பகிர்ந்து, அதற்கு மற்றவர்களின் கண்ணோட்டத்தை கேட்டுப் பெற வேண்டும். 

தங்களது ஆதரவை விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் வாயிலாக என்றென்றும் எதிர்பார்க்கிறேன்.

நன்றி, வணக்கம்!